பாஜக தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சென்று சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. டிஜிபி சைலேந்திரபாபுவுடனான சந்திப்பிற்கு பிறகு தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவை சந்தித்து தமிழக சட்ட ஒழுங்கு நிலைமை பற்றி பேசினேன். பாஜகவை சேர்ந்தவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களிலும், மேடைகளிலும் பேசி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் போது வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். மேலும் அதே மேடையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் என்னும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி பிரபு மறைவிற்கு நியாயம் கிடைக்க வில்லை என்றால் திமுகவிற்கு எதிராக வெடிகுண்டு வைப்போம்”. ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கி சுடவும் தெரியும், குண்டு வைக்கவும் தெரியும் என்று பேசியிருந்தார் .
வட இந்தியாவில் பாஜக என்ன செய்கிறார்களோ, அதேயேதான் தமிழ்நாட்டிலிலும் அவர்கள் செய்ய நினைக்கிறார்கள். உத்திரப் பிரதேசத்தை போல் தமிழ்நாட்டையும் ஆக்க வேண்டும் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள். பாஜக தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு காவி உடை அணிவித்து அவமரியாதை செய்தனர். இப்படி நாடெங்கிலும் பதற்றத்தை உண்டாக்குகிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்முறையை தூண்டுகிறது என்று போலீசார் கிராமம் கிராமமாக சென்று 26 நபர்களை கைது செய்தனர். ஆனால் பாஐக தான் வன்முறையை தூண்டும் வகையில் ஆபாசமாக பேசும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறேன். பாஐக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கை எனத் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா