ஒரே நாடு ஒரே இந்தியா எனக்கூறும் மத்திய அரசு தெற்கு ரயில்வேவுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? என மக்களவையில் திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளாக ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என தெரிவித்தார். ரயில்வே துறையில் 2.60 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறிய அவர், தென்னிந்தியர்களுக்கு ரயில்வே பணியில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோன்று, ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாநில மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் எனக்கூறிய அவர், மாநில மொழி தெரியாமல் ரயில்வே பணியாளர்கள் திணறி வருவதாக குறிப்பிட்டார். மேலும், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பெட்டியை மீண்டும் ரயில்களில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த கனிமொழி, மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பெட்டியில் பயணம் செய்யும் பிறநபர்கள் மீது ரயில்வே துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ரயில் தண்டவாளங்களில் யானைகள் சிக்கி உயிரிழப்பதை தடுக்க வனத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். ரயில்வே பைலட்டுகளுக்கு யானை வழித்தடம் குறித்த தகவல் பலகை எங்கெங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை ரயில்வே துறை தெரிவிக்க வேண்டும் என்றும் கனிமொழி அறிவுறுத்தினார்.
மேலும், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விரைவு ரயில்கள் அனைத்தையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். நடப்பாண்டு பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு 59 கோடி ரூபாயும், வடக்கு ரயில்வேவுக்கு 13,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
தெற்கு ரயில்வேயை விட 110 மடங்கு வடக்கு ரயில்வேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய கனிமொழி, ஒரே நாடு ஒரே இந்தியா எனக்கூறும் மத்திய அரசு தெற்கு ரயில்வேவுக்கு மட்டும் பாரபட்சம் பார்ப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.