ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து வரும் 12-ம் தேதி முடிவு எடுக்கப்படும் அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூருக்கு வருகை வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது..
”ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து வெறுமனே 5000 – 10,000 வாக்குகள் கூடுதலாக பெற முடியுமே தவிர அவர்களால் வெற்றி பெற முடியாது. குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்பதால் தான் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடக் கூடாது என யாரும் நிர்பந்திக்கவில்லை.
எம்ஜிஆரிடமும் ஜெயலலிதாவிடமும் இருந்த வரை இரட்டை இலை சின்னம் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. தற்போது அதன் செல்வாக்கு குறைந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் அதன் செல்வாக்கை இழக்கும்.
இடைத்தேர்தலில் திமுகவுக்கும் வாக்களிக்க மாட்டோம், அதிமுகவிற்கும் வாக்களிக்க மாட்டோம். யாருக்கு ஆதரவு என்பது குறித்து வரும் 12 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும்.
திமுக நிதியிலிருந்து அறிவாலயத்திலோ அல்லது கலைஞரின் நினைவிடத்திலோ திமுகவினர் பேனா நினைவுச் சின்னம் அமைத்துக் கொள்ளட்டும். கடலில் அமைக்கும் போது தான் பிரச்னைகள் வருகிறது. பேனா சிலையை உடைப்பேன் என்ற நிலை வருவதற்கு அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் காரணம்” என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
– யாழன்







