திருக்குறளில் ஆன்மிகம் உள்ளது என ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்துக்கு, வள்ளுவம் வாழ்வியல் நூல் என பாடலாசிரியர் வைரமுத்து பதிலளித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் தனக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு திருக்குறளின் முழுமையான அர்த்தத்தை புரிந்து வாசித்து வருகிறேன்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருக்குறள் நூலை பலரும் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். பக்தி தொடங்கி ஐந்து புலன்களை அடக்கி ஆளுதல் வரை ஒருவரின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் திருக்குறள் பேசுகிறது. வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டுமே திருக்குறளை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கருதப்பட்டு வருகிறது. திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை. ஆன்மிகம்தான் இந்தியாவின் ஆணிவேர் என்பதை யாரும் பேசவில்லை என தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் இந்த கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொதுவுடமையான திருக்குறளை ஆன்மிகத்துடன் மட்டுமே ஒப்பிடுவது கண்டிக்கத்தக்கது என விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், தர்மார்த்த காமமோட்சம் என்பதுவடமொழி நிரல்நிரை. மோட்சம் ஆன்மிகக் கற்பனை என்றுதான் வள்ளுவர் அறம் பொருள் இன்பத்தோடு நிறுத்தினார் என குறிப்பிட்டுள்ளார். ஆன்மிகம் அதில் ஏது? வள்ளுவம் வாழ்வியல்நூல். அதுகாற்றைப்போல் பொதுவானது காற்றுக்கு யார் சாயம் அடிப்பது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-இரா.நம்பிராஜன்