”ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடுகிறது” – தமிழிசை செளந்தரராஜன்

ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடுவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்திற்கு, கல்விச் சுற்றுலா வந்த மும்பையை சேர்ந்த பள்ளி மாணவர்கள், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு…

ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடுவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்திற்கு, கல்விச் சுற்றுலா வந்த மும்பையை சேர்ந்த பள்ளி மாணவர்கள், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, ராஜ் நிவாசில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர். மாணவர்களுக்கான இன்றைய கல்விமுறை, சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம், போட்டி நிறைந்த உலகில் தங்களை தகுதிப்படுத்திக் கொண்டு வெற்றியாளர்களாக உருவாகுவதற்கான முயற்சி ஆகியவை குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துரையாடினார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலை, உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பதால் கருத்து சொல்ல முடியாது. ஆளுநரின் தாமதம் தான் 6 பேர் விடுதலைக்கு காரணம் என்றும் கூறமுடியாது. ஆளுநர் முடிவெடுப்பதில் சில சவால்கள் இருந்திருக்கலாம். சிறையில் இருப்பவர்களை விடுவிக்கும்போது பல மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருந்து விடக்கூடாது என்று ஆளுநர் அதை சவாலாக நினைத்து இருக்கலாம். ஆளுநருக்கு முடிவெடுப்பதில் சில காரணங்கள் இருந்திருக்கக் கூடும். எனவே நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆளுநர்களை பற்றி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார்கள். இப்போது, கவனம் ஆளுநர் பக்கம் திரும்பியுள்ளது. எல்லா ஆளுநர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு, சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் நடக்கிறோம். இதில் விதிமீறல்கள் இல்லை. ஆனால் சின்ன சின்ன நடவடிக்கைகளை கூட விமர்சனம் செய்வதற்கு சில அரசியல்வாதிகள் கிளம்பியுள்ளனர். அதில் சீத்தாராம் யெச்சூரியும் ஒருவர். மேலும் ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடுகிறது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.