எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை அடுத்த வாரம் அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் நிகழாண்டு நடத்தி முடிக்கப்பட்ட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் முதலிடம் என பல முறைகேடுகள் நிரூபணமான நிலையில் நீட் தேர்வே பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதுதொடர்பான வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற விசாரணையில், மாணவர்களின் பெயர்கள், எண்களை மறைத்து நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக நாளை மறுநாள் (ஜூலை 20) நண்பகல் 12 மணிக்குள் நீட் முடிவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை அடுத்த வாரம் அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.






