கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 3-ந்தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 30-ந்தேதியும் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்றுடன் இறுதித்தேர்வுகள் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், கோடைகால விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, 2023 – 24 ஆம் ஆண்டிற்கான அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வியாண்டு நாள்காட்டியையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளிட்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா








