திராவிட மாடல் என்ற வார்த்தையை முற்றிலும் தமிழில் பயன்படுத்தலாம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரத்தை சார்ந்த திருமுருகன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு ஒன்றை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது..

அதில், “தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள்
உள்ளிட்ட அனைத்து விதமான அலுவலகங்கள், கடைகளில் தமிழக அரசின் 1982ம் ஆண்டு
அரசாணை படி தூய தமிழில் பெயர் பலகை எழுத வேண்டும் என்ற அரசாணையை அமல் படுத்த நடவடிக்கை எடுக்க தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாளருக்கு
உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டு இருந்தது.
ஆனால், பல மாதங்கள் கடந்த நிலையிலும், தூய தமிழில் பெயர் பலகை எழுத வேண்டும்
என்ற அரசாணையை அமல் படுத்தவில்லை. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறை படுத்தாத தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ஜி.ஆர்.சாமிநாதன்
“தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் உண்மை யாவும், கடுமையாகவும்
பாடுபட வேண்டும். சட்டக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பாட புத்தகங்கள் தமிழில் வழங்க வேண்டும். சட்டக் கல்லூரிகளில் வழக்கு தொடர்பான குறிப்பு எடுக்கப்படும் சட்ட
புத்தகங்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும்.
தற்போது, திராவிட மாடல் என கூறப்படுகிறது. அந்த திராவிட மாடலில், மாடல்
என்ற ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ் சொல் என்ன? ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள். முற்றிலும் தமிழிலே பயன்படுத்தலாம்.
தமிழக அரசாணையின்படி தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பெயர் வைக்காமல்,
ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பு வைத்து உள்ள நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட
நடவடிக்கை என்ன? என்பது குறித்து விரிவான தொழிலாளர் நலத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ம் தேதி ஒத்தி வைத்தனர்.







