ரவுடிகள் பட்டியலில், பெயர் இடம் பெற்றால் என்ன சிக்கல்கள் ஏற்படும்? ரவுடிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க காவல்துறை என்ன செய்கிறது? திருந்தி வாழும் ரவுடிகளை காவல்துறை கண்காணிப்பது எப்படி? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
ரவுடிகளை கண்காணித்து அவர்களது குற்றச் செயல்களை தடுக்க தமிழக காவல்துறையில் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு, ரவுடி ஒழிப்பு பிரிவு, சிறப்பு தனிப்படை ஆகியவை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த சிறப்பு பிரிவுகள் மூலம் தான் தமிழகத்தில் ரவுடிகள் கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், ரவுடிகளை டிஜிட்டல் மூலமாக கண்காணிப்பை மாற்றி உள்ளது தமிழக காவல்துறை. TRACKD APP என்ற செயலி மூலம் நடைமுறையை மாற்றி உள்ளது காவல்துறை. தமிழகதத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளதாக காவல்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறையின் ரவுடிகள் பட்டியலில் ஒருவரது பெயர் வந்தால் அதனை அதிலிருந்து சுலபமாக நீக்கி விடமுடியாது. திருந்தி வாழ வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரவுடிகள் காவல்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தால் மட்டும் ரவுடிகள் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்து விடப்படாது. அதற்காக நீதிமன்றம் மூலம் உத்தரவுகளை பெற வேண்டும், ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் மீது, 10 ஆண்டுகளில் வழக்குப்பதிவு செய்திருக்க கூடாது, சொந்த ஊரில் வசிப்பவராகவும், குற்றச்செயலில் ஈடுபடாமலும், அதில் ஈடுபடுவோருக்கு உதவுபவராகவும் இருக்கக்கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை விதிக்கிறது.
ரவுடிகள் பட்டியலில் பெயர் வந்து விட்டால் வேலை கிடைப்பதில் இருந்து பாஸ்போர்ட் வாங்குவது வரை பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கின்றனர் காவல்துறையினர். திருந்தி வாழும் ரவுடிகளை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு, ரவுடி ஒழிப்பு பிரிவு, ரவுடிகளை ஒழிக்க சிறப்பு தனிப்படை ஆகிய சிறப்பு படைகள் ரகசியமாக கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
“கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை தயாரிப்பவர்கள் விவரம், இடங்களை கண்டறிந்து வைத்திருப்பது, ஆயுதங்களை வாங்க வருவோரின் விவரம், எதற்காக இந்த ஆயுதங்கள் என்பது குறித்த பதிவேட்டு விவரம், விவசாயம், வீட்டு உபயோகம் தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் விற்பனை செய்யாமல் இருத்தல், பட்டறைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்” என்று ஏற்கனவே தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.