கொலை செய்து துண்டிக்கப்பட்ட தலை மாயமானால் வழக்கு கிடப்பில் போடப்படுகிறதா? குரூரக் கொலைகளை ரத்த உறவுகளே செய்ய காரணங்கள் என்ன? இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை ராயபுரத்தில் தி.மு.க. பிரமுகர் சக்கரபாணி கடந்த மே மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி தமீம்பானு என்பவர் வீட்டில் இருந்தது. சக்கரபாணியின் தலை அடையாற்றில் வீசப்பட்டது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. துண்டிக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சக்கரபாணியின் தலை இதுவரை கிடைக்கவில்லை. காவல்துறையினர் பலவிதங்களில் முயற்சிகளை எடுத்தும் எந்த பலனுமில்லை.
தலை கிடைக்கவில்லை என்பதால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் போய் விட்டதா? தலையை துண்டித்து வீசிவிட்டால் அந்த வழக்கில் கொலையாளிகளுக்கு தண்டனையை காவல்துறையால் பெற்றுத் தரமுடியாதா? என்ற கேள்விகளுக்கு விடையை அளித்துள்ளார் சென்னை காவல்துறை இணை ஆணையர் ரம்யா பாரதி.
உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்படும் சம்பவங்கள் சமீபத்தில் அதிகமானதற்கு முக்கிய காரணங்கள் மனரீதியிலான பாதிப்பு தான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். குரூரமாக கொலை செய்துவிட்டு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருப்பது தான் கொலையாளிகளின் மனரீதியிலான முக்கிய பாதிப்பு. குரூர எண்ணங்கள் உருவாக சினிமாவில் வரும் வன்முறை காட்சிகளும் ஒரு காரணம் என்று சொல்லலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்.
வன்முறை எண்ணங்கள் உருவாக வன்முறை வீடியோ கேம்களும் காரணமாக இருப்பதாக மனநல மருத்துவர்கள் எடுத்த சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொலைக்கான காரணங்களில் முறையற்ற உறவுகள், காதல் விவகாரங்கள் ஆகியன முக்கிய காரணங்களாக இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் சொல்கிறது.
– சுப்பிரமணியன், குற்றப்பிரிவு தலைமைச் செய்தியாளர், நியூஸ் 7 தமிழ்.







