தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதவிதான் உதயநிதிக்கு கொடுத்திருக்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அன்னூர் பகுதியில் விவசாய நிலங்கள் டிட்கோ மூலம் கையகப்படுத்தப்படும் விவகாரத்தில், பாஜகவை தாண்டி வந்தால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தோம். இப்போது, தமிழக அரசு 1,630 ஏக்கர் தரிசு நிலம் மட்டும் டிட்கோ மூலம் எடுத்து கொள்வோம், மீதமுள்ள இடத்தை விவசாயிகள் கொடுத்தால் மட்டுமே எடுத்து கொள்வோம் என சொல்லி இருக்கின்றது. அரசின் இந்த நடவடிக்கையினை பாஜக வரவேற்கிறது.
மொத்தமாக எடுக்க இருந்த நிலத்தில் 2,100 ஏக்கர் விவசாய நிலம் இருப்பதை அரசு இதன் மூலம் ஒப்புகொண்டுள்ளது. முக்கியமாக அரசு தனது கடமையை உணர்ந்துள்ளது. ஏற்கனவே வெளியிட்ட அரசாணையை தளர்த்தி அரசு அறிவிக்க வேண்டும். இதை கோரிக்கையாக வைக்கின்றோம்.
இரு தினங்களில் விவசாயிகளை பாஜக விவசாய அணி நிர்வாகிகள் சந்திக்க இருக்கின்றனர். அரசு தனது தவறை உணர்ந்து கொண்டு திருத்தி இருக்கின்றது. அண்ணாமலைக்கும் ஆ.ராசாவிற்கும் பிரச்னை இல்லை. அண்ணாமலைக்கும் ஊழல்வாதிகளுக்கும்தான் பிரச்னை. அன்னூர் பகுதி விவசாயிகளின் கருத்தை கேட்டபின் எங்களது அடுத்த நடவடிக்கை இருக்கும். தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெளிவாக இருக்கின்றது. நிலமில்லாத அனைவருக்கும் நிலம் கொடுக்க வேண்டும் என்ற திமுகவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் போராடினால் ஆதரிப்போம்.
கிணத்துக்கடவு பகுதியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை தொடர்பாக அடுத்த கட்டமாக பாஜக போராட்டம் நடத்தும். ஆவின் ஆரஞ்ச் கலர் பால் பாக்கெட் விலை உயர்த்திய பின்னர், 5000 லிட்டர் விற்பனை குறைந்திருக்கின்றது. ஆவின் நெய் விலையை அமுல் நிறுவனத்துடன் ஒப்பிட்டால் 35 ரூபாய் அதிகமாக இருக்கின்றது. திமுக குடும்ப உறுப்பினர் ஒருவர் பால் நிறுவனம் துவங்கி இருக்கிறார். இல்லை என அவர்கள் மறுத்தால் அடுத்த செய்தியாளர் சந்திப்பில் அதை தெரியப்படுத்துகிறோம்.
சமீபகாலமாக அரசியல்வாதிகளின் உடை, பயன்படுத்தும் பொருட்கள் விமர்சனம் செய்யப்படுகின்றது. கையில் கட்டி இருக்கும் வாட்ச் 3.5 லட்ச ரூபாய். ரபேல் விமானத்தின் பார்ட்ஸ்ஸை வைத்து இந்த வாட்ச் செய்தார்கள். மொத்தம் 500 வாட்சுகள் நாட்டில் இருக்கின்றது. ஒவ்வொரு வாட்ச்சிற்கும் எண் இருக்கும். இது 149வது வாட்ச். என் உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் இருக்கும். நான் தேசியவாதி. அதனால் ரபேல் வாட்ச்சை கட்டி இருக்கிறேன். இது என் தனிப்பட்ட விஷயம்.
அன்னூர் பகுதிக்கு நிலம் கையகப்படுத்த டிட்கோ வந்ததே தண்ணீருக்காக தான். நாங்குநேரி தொழிற்பேட்டையில் 20 வருடத்திற்கு முன்பு திமுக எடுத்த 2000 ஏக்கர் நிலம் இன்னமும் பயன்படுத்தபடவில்லை. அதை முதலில் பயன்படுத்த வேண்டும். உள்துறை பலமாக இருக்கின்றது. கோவை கார் வெடிப்பு வழக்கு என்ஐஏ வசம் சென்ற பிறகு, வழக்கு விசாரணை திருப்திகரமாக இருக்கிறது. அதன் தலைமை பொறுப்பில் இருப்பவர்களே நேரடியாக வந்து விசாரித்து சென்று இருக்கின்றனர்.
உதயநிதி மகன் இன்பநிதி அடுத்து அரசியலுக்கு வரவேண்டும் என திமுக அமைச்சர்கள்,
எம்.எல்.ஏக்கள் தெரிவித்து வருகின்றனர். தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதவிதான் உதயநிதிக்கு கொடுத்திருக்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். திமுகவினர் தனிமனிதனுக்காக ஜால்ரா அடிப்பதையே வேலையாக கொண்டிருக்கின்றனர். பழைய வரலாற்றை திமுகவினர் திரும்ப படிக்க வேண்டும்.
சி.வி.சண்முகம் பாஜகவில் சேர்ந்துவிட்டாரா என தெரியவில்லை. 4 நாட்களாக கமலாலயம் செல்லவில்லை. சி.வி.சண்முகம் பாஜகவில் சேர்ந்து விட்டாரா என அலுவலகத்தில் கேட்டு சொல்கின்றேன். பாஜகவில் இருப்பவர்களால்தான் இது பற்றி கருத்து சொல்ல முடியும். வரும் 2024ஆம் ஆண்டு தேர்தல், மோடிக்கான தேர்தல். தேர்தலுக்கு இன்னும் 16 மாதம் இருக்கின்றது. அதிமுக இன்னும் வளர வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். பாஜக வளர வேண்டும் என நாங்கள் நினைக்கின்றோம். குஜராத் மாநிலத்தில் புதிய அரசு பதவி ஏற்பில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் ஓ.பன்னீர் செல்வம் தனது மகன் எம்.பி. ரவிந்தீரநாத்துடன் கலந்து கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை பாஜக தான்.
பாஜகவை திட்டித்தான் தினமும் முரசொலியிலும், திமுக சார்ந்த செய்தி நிறுவனங்களிலும் செய்தி இருக்கின்றது. பாஜக எங்கே இருக்கின்றது என கேட்டவர்கள் அவர்கள். ஆரியம், திராவிடம் என்ற பிரிவினையையே ஏற்காதவன் நான். டான்டீ நிறுவனம் மலையக தமிழர்களுக்காக துவங்கப்பட்டது. வனத்துறைக்கு ஏன் டான்டீ நிலத்தை திருப்பி கொடுக்கின்றீர்கள். ஆ.ராசாவிற்கு சரித்திரம் தெரியவில்லை. டான்டீயை கலைஞர் துவங்கவில்லை. தமிழக டாஸ்மாக் கடைகளில், ஸ்பிரிங் என்ற நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்படுகின்றது. இதுவும் திமுகவிற்கு வேண்டப்பட்ட குடும்பத்தினர் நடத்துவதுதான். தமிழகத்தன் நம்பர் 1 நடிகர் ஸ்டாலின்தான்” என்று தெரிவித்தார்.







