கள்ளக்குறிச்சி அருகே தனது பண்ணை வீட்டில் வைத்து சட்டவிரோதமாக ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைகோட்டாலம் கிராமத்தில் காட்டுக் கொட்டாய் பகுதி உள்ளது. இங்கு வடிவேல் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இங்கு அடிக்கடி கர்ப்பிணிப் பெண்கள் வந்து செல்வது அப்பகுதியில் உள்ளவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மருத்துவ இயக்கதுறையின் டிஎஸ்பி சரவணன் தலைமையில்,சென்னையில் இருந்து 6 பேர் கொண்ட கும்பல் பண்ணை வீட்டிற்கு படையெடுத்தனர். அப்போது, அங்கு சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதை வடிவேல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து தெரிவிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான கருவிகளும் அவர் பண்ணை வீட்டில் வாங்கி வைத்துள்ளார். குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பார்த்து சொல்வதற்காக ஒவ்வொருவரிடமும் 15 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து வந்துள்ளார். இதையடுத்து, வடிவேலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்த கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.இதனிடையே, வடிவேலுக்கு இடைத்தரகராக செயல்பட்டு வந்தவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் முதல் முறை வடிவேலுடன் இணைந்திருப்பது தெரியவந்ததும் அவரை எச்சரித்து போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? தெரிவித்து வந்த வடிவேலை கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் அவர் பயன் படுத்தி வந்த பண்ணை வீட்டையும் வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இத்தனை நாட்களாக யாருக்கும் தெரியாமல் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட வந்த வடிவேல், இதுவரை எத்தனை பேருக்கு இதுபோல் ஸ்கேன் மூலம் பார்த்து சொல்லியிருக்கிறார். இதன் மூலம் அவர் ஈட்டிய வருமானம் எவ்வளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்