இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் சுதா மூர்த்தி தனது வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி. எழுத்தாளரான இவர், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் ஆவார். இதன் காரணமாக இவர் தற்போது பிரபலமடைந்து வருகிறார். இந்நிலையில் சுதா மூர்த்தி, ’தி கபில் ஷர்மா ஷோ’ என்ற இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் தனது வாழ்க்கையை குறித்தும், குடும்பத்தினரைக் குறித்தும் மனம் திறந்து பேசினார்.
அப்போது தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றையும் சுதா மூர்த்தி பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து பேசிய அவர், “ஒருமுறை நான் லண்டன் சென்றபோது, குடியுரிமை அதிகாரி ஒருவர், லண்டனில் நான் எங்கு வசிக்கப் போகிறேன் என்று கேட்டார். அப்போது என்னுடைய சகோதரியும் என்னுடன் இருந்தார்.
இதையும் படியுங்கள் : தொடரும் சோகம் – விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு!!
என்னுடைய மகன் லண்டனில் தான் வசித்து வருகிறார். ஆனால் அந்நேரம் எனக்கு அவனது முகவரி ஞாபகம் இல்லை. அதனால் நான் எனது மருமகனினும், பிரிட்டன் பிரதமருமான ரிஷி சுனக்கின் வீட்டு முகவரியை எழுதினேன். ’10 டவுனிங் ஸ்ட்ரீட்’ என்ற அந்த முகவரியை பார்த்த அதிகாரி, ”என்ன விளையாடுகிறீர்களா?” என்று என்னை பார்த்து கேட்டார். அவரிடம் நாந்தான் பிரதமரின் மாமியார் என்று விளக்கமாக கூறினேன். பின்னர் தான் என்னை நம்பினார்கள். 72 வயது எளிமையான பெண் எப்படி பிரதமரின் மாமியாராக இருக்க முடியும் என்று என்னை அனைவரும் வியந்து பார்த்தார்கள்” என்று தெரிவித்தார்.







