நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்று அறிவித்து
இருக்கும்போது பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் என்ன என்பதை அறிவிக்க வேண்டும்
என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்
அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் தந்தையின் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கு தொல்.திருமாவளவன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என பட்டியலை நாடாளுமன்ற சபாநாயகர் வெளியிட்டுள்ளார். அப்போது ஜெயராம், ஸ்ரீராம், பாரத் மாதாஜி கி ஜே உள்ளிட்ட வார்த்தைகளை தான் பயன்படுத்த வேண்டுமா என்பது குறித்தும் விளக்க வேண்டும்.
இவ்வகையான நடவடிக்கை எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெரிக்கும் செயலாக உள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வில் தமிழகத்தில் மிக தாழ்ந்த ஜாதி என கேட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஜாதி இல்லை எனக் கூறிவரும் நிலையில் இது
சனாதனத்தின் உச்சமாக கருதப்படுகிறது. இதற்கு காரணமான பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் ஆளுநராக உள்ள ஆர்.என். ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக செயல்படுகிறார். அவர் கவர்னராக செயல்படாமல் ஆர்எஸ்எஸ் பிரசாரகராகச் செயல்படுகிறார். அவரது செயல்பாடு ஒட்டுமொத்த தேசத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நாம் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருளுக்கும் சேவைக்கும் வருங்காலங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படும். இதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இலங்கையில் சிங்கள மக்களுக்காக எனக் கூறி ஆட்சி செய்த ராஜபக்சேவை சிங்கள மக்களே அடித்து துரத்தி உள்ளதை நாம் கண்டு வருகிறோம். அதே நிலைமை இந்து மக்களுக்காக ஆட்சி செய்வதாக கூறும் பாஜக அரசை இந்து மக்களே
ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தும் காலம் வரும் என்றார் தொல்.திருமாவளவன்.
முன்னதாக, ஜூலை 18 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக, மக்களவை செயலகம், லோக் சபா மற்றும் ராஜ்ய சபா இரண்டிலும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாததாக கருதப்படும் வார்த்தைகள் மற்றும் வெளிப்படுத்தல்களை பட்டியலிட்டு புதிய கையேட்டை தொகுத்து வெளியிட்டது சர்ச்சையானது.








