அடுத்த ஆட்சிக்கு இன்று இங்கு வந்திக்கும் கூட்டமே சாட்சி என்று எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை வருகை தந்துள்ளார். அவரை கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு தலைமையிலான அதிமுகவினர் மேளதாளத்துடன் மலர்கள் தூவி உற்சாகத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற தொண்டர்களின் முழக்கத்தால் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் உங்கள் ஆதரவோடு பயணத்தை தொடர, எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர், சில பேர் நம்முடைய இயக்கத்தில் இருந்து கொண்டு அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். சில பேர் செய்த சதியினால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் நம்மால் ஆட்சி பிடிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு யார் யாரெல்லாம் ஆட்சிக்கு வருவதற்கு தடையாக இருந்தாரோ அந்த தடை கற்கள் எல்லாம் உடைத்து எறியப்பட்டுள்ளது. அடுத்த ஆட்சிக்கு இந்த கூட்டமே சாட்சி.எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை தாண்டி வெற்றி வாகை சூடுவோம் என்றார்.
தமிழகத்தை ஆட்சி செய்து வரும் ஸ்டாலின் அதிமுகவை முடக்க பார்க்கிறார். இன்றைக்கு நமது துரோகிகளோடு சேர்ந்து கொண்டு எம்ஜிஆர் மாளிகையை சீல் வைத்திருக்கின்றார்கள். தமிழகத்தில் அதிக முறை ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக தான். 31 ஆண்டுகள் ஆட்சி செய்தது அதேபோல் தமிழகத்தின் மிக நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருந்ததும் அதிமுக தான் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்பொழுது தமிழகத்தில் நடைபெற்று வருவது திமுகவின் சட்ட ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சியாகும். அதிமுகவிற்கு துரோகம் செய்த பன்னீர்செல்வம் திமுகவின் பீ டீமாக செயல்படுகிறார். எம்ஜிஆர் ஆல் துவங்கப்பட்ட அதிமுகவை சில துரோகிகள் அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்து விடுவார்கள் என்று ஆவேசமாக கூறினார்.
இலங்கையில் குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சே குடும்பத்தினர் எப்படி அந்த நாட்டு மக்களின் எதிர்ப்பால் நாட்டை விட்டு சென்று உள்ளார்களோ, அதே போல் விரைவில் இந்த திமுகவினரும் செல்வார்கள். அதிமுக தொண்டர்களால் ஆன கட்சி. தொண்டர்கள் நினைத்ததால் தான், நான் தற்பொழுது இடைக்கால பொது செயலாளராக ஆனேன் என்று தெரிவித்தார்.








