32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

“தி ஃபேமிலி மேன்” மூன்றாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதியா??

கடந்த சில நாட்களாக, இணையத் தொடர்களில் அதிகம் சர்ச்சையை சந்தித்த ஒரு தொடர் என்றால், உடனே நம் ஞாபகத்துக்கு வருவது தி ஃபேமிலி மேன் இணையத் தொடர் தான். 2019ம் ஆண்டு முதல் பாகம் வெளியான நிலையில், அண்மையில் அதன் இரண்டாம் பாகம் வெளியாகி வரவேற்பையும் எதிர்ப்பையும் சந்தித்தது. முதல் பாகம் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளை போல சித்தரித்திருந்ததாக எதிர்ப்பை சம்பாதித்தது. இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமல்லாமல் பலரும் இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த 4ம் தேதி தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியானது. இதன் முன்னோட்டம் வெளியான போதே ஈழத்தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளதாகவும் அவர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்திருப்பதாகவும் எதிர்ப்பை சந்தித்தது. மேலும், இரண்டாம் பாகத்தில் நடித்த சமந்தா உள்ளிட்டோருக்கு எதிரான சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களும் எழுந்தன. இதனால் வைகோ, பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் இந்த தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்க, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதினார். இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் உருவானதால், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான தி பேமிலி மேன் இரண்டாம் பாகம், கடும் எதிர்ப்பு காரணமாக ஹிந்தியில் மட்டுமே வெளியானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் தான், தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் மூன்றாம் பாகத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2ம் பாகத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய், இயக்குனர் ராஜ், டிகே ஆகியோர் விஜய் சேதுபதியை சந்தித்து பேசியதாக மனோஜ் பாஜ்பாய் தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 2ம் பாகத்திலேயே விஜய் சேதுபதியை நடிக்கவைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அதில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தி பேமிலி மேன் 3 ஆம் பாகத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நடிப்பது உறுதியானால் விஜய்சேதுபதி சர்ச்சையில் சிக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு உதாரணமாக கூறப்படும் சம்பவத்தையும் நாம் மறந்துவிட முடியாது. இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் 800 என்ற தலைப்பில் உருவாக உள்ளதாகவும், அந்த படத்தை எம்.எஸ்.ஶ்ரீபதி இயக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஈழத்தமிழர் விவகாரத்தில் முத்தையா முரளிதரனின் நடவடிக்கையை குறிப்பிட்டு, அந்த படத்தில் விஜய் சேதுபதி நடிகக் கூடாது என எதிர்ப்பு எழுந்தது. சர்ச்சை, போராட்டம் என இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், 800 திரைப்படத்தில் விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்து, ட்விட்டர் பக்கத்தில் நன்றி வணக்கம் என முடித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே, விஜய் சேதுபதி தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் மூன்றாம் பாகத்தில் நடித்தால், அவர் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்ற தகவல்கள் உலா வ்ருகின்றன. ஆனால், சர்ச்சைக்கு அப்பாற்பட்டு தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் மூன்றாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா? அல்லது அதில் நடிப்பதை தவிர்ப்பாரா? என்பதையெல்லாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading