திமுகவின் அடக்குமுறைகளை கண்டு அஞ்சமாட்டோம் என கோவை மாவட்ட பாஜக தலைவரின் கைதிற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை பீளமேடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஆ.ராசாவையும் திமுக தலைவர் ஸ்டாலினையும் இழிவாக பேசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வீடியோ ஆதாரத்துடன் நேற்று பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட பீளமேடு போலீசார் இன்று காலை வீட்டிலிருந்த பாலாஜி உத்தம ராமசாமியை விசாரணைக்காக போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதையடுத்து கோவை மாவட்ட பாஜக தலைவரின் கைதை கண்டித்து அக்கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை.
வெறுப்பை உமிழும் ஆ.ராசாவை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமியை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ஆ.ராசாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம். உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என பதிவிட்டுள்ளார்.







