சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற
கல்லூரியாக திகழ்ந்து வருகிறது. இக்கல்லூரியில் 25 ஆண்டுகளாக வேதியியல் துறை பேராசிரியையாகவும், கடந்த 2019-ம் ஆண்டு முதல் முதல்வராகவும் பணியாற்றி வந்த கோதை உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.
56 வயதாகும் கோதை, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை
ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். கல்லூரியின் முன்னாள், இந்நாள் மாணவியரின் அன்பைப் பெற்றிருந்த முதல்வர் கோதை உயிரிழந்த சம்பவம், மாணவியரிடையேயும், சக பேராசிரியைகள், கல்லூரி நிர்வாகத்தினரிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கள் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.
25 ஆண்டுகள் எத்திராஜ் கல்லூரியில் பணியாற்றி, 2019-ஆம் ஆண்டுமுதல் கல்லூரி முதல்வராகவும் பொறுப்பு வகித்து மாணவிகளின் நன்மதிப்பைப் பெற்ற திருமதி. கோதை அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








