விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் எதிரொலியாக ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
http://www.aoboa.co.in என்ற இணையதளத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆம்னி பேருந்துகளில் அவற்றின் வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருக்கை வசதி , படுக்கை வசதி , குளிர்சாதன வசதி என பேருந்துகளின் வசதிகளுக்கு ஏற்ப கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக சென்னையில் இருந்து மதுரை செல்ல கட்டணம் Non AC SEATER – 690 முதல் 1170, Non AC SLEEPER – 930 முதல் 1580, AC SEATER – 870 முதல் 1490, AC SLEEPER – 1170 முதல் 2000, சென்னை To திருநெல்வேலி Non AC SEATER – 870 முதல் 1490, Non AC SLEEPER – 1200 முதல் 2050, AC SEATER – 1140 முதல் 1940, AC SLEEPER – 1450 முதல் 2530, சென்னை To கோவை Non AC SEATER – 720 முதல் 1240, Non AC SLEEPER – 990 முதல் 1690, AC SEATER – 940 முதல் 1600, AC SLEEPER – 1190 முதல் 2030 வரை வசூலிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு முன் தமிழகத்தில் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் மற்றும் சுற்றுலாவிற்கும் மொத்தம் 4,000 ஆம்னி பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்தன. கொரோனா தொற்றுக்குப் பின் தற்பொழுது தமிழகத்தில் 1,500 பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டுள்ளன.
ஆம்னி பேருந்துகளைப் பொறுத்தவரை Non AC Seater, AC Seater , Non AC Sleeper, AC Sleeper , Premium Sleeper , Volvo/Scania Multiaxle Seater , Volvo/Scania Multiaxle Sleeper என ஏழு வகையான பேருந்துகள் உள்ளன. இவ்வாறு இயங்கும் பேருந்துகளில் முதலீடு மற்றும் இயக்குவதற்கு ஆகும் செலவுகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வழித்தடத்திலும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. சாதாரண பேருந்துகள் 40 லட்சத்திலிருந்து மல்டி வால்வோ போன்ற சொகுசுப் பேருந்துகள் ஒரு கோடியே 70 லட்சம் வரை உள்ளன. ஆகையால் ஒரு வழித்தடத்தில் அனைத்து விதமான பேருந்துகளுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க இயலாது. மேலும் ஆம்னி பேருந்துகளுக்கு மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயிக்க வழிவகை இல்லை.
இன்று உலக அரங்கில் இந்தியா போன்று பல்வேறு நாடுகளில் போக்குவரத்துத் துறையில் கட்டணம் நிர்ணயம் என்பது விமானம், ரயில், பேருந்து ஆகிய வகையான போக்குவரத்திற்கு டைனமிக் மென்பொருள் மூலமாக தேவைகள் குறைவாக உள்ள பொழுது குறைந்த அளவு கட்டணமும், தேவைகள் அதிகமாக உள்ள பொழுது அதிக அளவு கட்டணமும் மென்பொருள் மூலமாகவே நிர்ணயிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கத்தின் சராசரி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இன்று இந்தியாவைப் பொறுத்தவரை விமானம், ரயில் மற்றும் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட சாலைப் போக்குவரத்திற்கும் இந்த முறையே கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் விமானப் போக்குவரத்தை பயன்படுத்த இயலாத பெருவாரியான பயணிகள் தங்கள் பயணத் திட்டத்திற்கு ஆம்னி பேருந்துகளையே நாடுகின்றனர் ஏனென்றால் ஆம்னி பேருந்துகளில் அவர்கள் விரும்பும் சொகுசு வசதிகள் உள்ளன.
ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றி வைத்துக் கொண்டு கட்டணம் வசூலிப்பது கிடையாது. பேருந்துகள் புறப்படுவதற்கு முன் ஆன்லைனில் பேருந்து கட்டணங்களை பயணிகளே பார்த்து அவர்கள் வசதிக்கு ஏற்றவாறு டிக்கெட் புக் செய்து பயணிக்கிறார்கள். அதனால் பயணிகள் விருப்பம் இல்லாமல் பயணிப்பதில்லை. அதனால் எந்தப் பயணிகளும் ஏமாற்றப்படுவதும் இல்லை. இருந்த போதிலும் அரசுக்கும் இந்தத் தொழிலுக்கு கெட்ட பெயர் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் சங்கங்கள் இணைந்து ஆம்னி பேருந்துகள் இயங்கும் அனைத்து வழித்தடங்களுக்கும் அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்துள்ளோம். இந்தக் கட்டண விவரம் http://www.aoboa.co.in என்ற வெப்சைட் முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணத்திற்கு அதிகமாக வசூலிக்கும் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனிவரும் விழா காலங்களில் இந்தக் கட்டணங்களுக்கு மிகாமல் கட்டணம் வசூலிக்க அனைத்து உரிமையாளருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த விழா காலங்களிலும் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி இதற்கு அதிகமான கட்டணம் வசூலித்த பேருந்துகள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரி மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா









