பாஜக தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஒரு நாள் பயணமாக இன்று தமிழ் நாடு வந்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூட்டணி கட்சி தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
பேச்சுவார்த்தை முடிவுற்றதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், “சென்னைக்கு வந்து எனது நண்பரும், சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை கூட்டணிக் கட்சிகள் இணைந்து குடும்பமாக எதிர்கொள்ளப் போகிறோம். 2026 தேர்தலை எதிர்கொள்வது மற்றும் வியூகங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினோம். 2026 தேர்தலை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம்” என்றார்.







