பாளையங்கோட்டையில் இடிந்துவிழும் நிலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்காவிட்டால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை பாளையங்கோட்டை அம்பேத்கர் காலனி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவையாகும். அனைத்து குடியிருப்புகளும் சேதம் அடைந்துள்ளன. எனவே, அக்குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித்தரும்படி, குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் பல முறை பொதுமக்கள் முறையிட்டனர். ஆனால் இதுவரையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தங்களது கோரிக்கையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இடிந்து விழும் நிலையில் உள்ள பாளையங்கோட்டை அம்பேத்கர் காலனி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்டித்தர வேண்டும் அல்லது ஒரு சென்ட் நிலம் சொந்தமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைத்துள்ளனர்.
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடிகளைக் கட்டியும் தங்களது கோரிக்கை நிறைந்த பதாகைகளை வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன் திருவொற்றியூரில் கட்டிட விபத்து நடந்துள்ள நிலையில், பாளையங்கோட்டையிலிருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளால் மற்றொரு கட்டிட விபத்து ஏற்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துக் கொண்டு வருகிறது