“இறந்தவர்கள் குடும்பத்திற்கு நம் ஆதரவாக இருக்க வேண்டியது” – தமிழிசை சௌந்தரராஜன்!

எதிர்பார்த்ததை விட அதிக அளவு கூட்டம் வந்ததால் உயிர்ப்பலி ஏற்பட்டது என்ற கருத்து ஏற்க முடியாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ” கனத்த இதயத்தோடு கரூருக்கு சென்று கொண்டிருக்கிறோம். எதிர்பாராத சோக நிகழ்வாக இருக்கின்றது. மாலை வரை மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் திடீரென அதிர்ச்சி அளிக்கும் செய்திகளாக இருந்தது. தற்போது நாம் செய்ய வேண்டியது, இறந்தவர்கள் குடும்பத்திற்கு நம் ஆதரவாக இருக்க வேண்டியது.

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரை அங்குள்ள குடும்பங்களுக்கு என்ன தேவை, என்ன மருத்துவ உதவி தேவை, குடும்பங்களுக்கு என்ன வகை உதவி தேவைப்படுகிறது. அவற்றை அவர்களுடன் இருந்து அவற்றை பெற்றுத்தரும் நோக்கத்தில் வந்திருக்கிறேன். அரசாங்கம் இதனை கவனத்துடன் கையாண்டு இருக்க வேண்டும், இந்த கூட்டம் வரும் இந்த கூட்டத்தை சமாளிப்பது என்றும், மேலும் கூட்டங்கள் நடக்கின்ற இடத்தில் விபத்துகள் ஏற்பட்டால் பேரிடர் எவ்வாறு தயாராக இருக்கிறார்களோ அதைப்போன்று இங்கு தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

வருங்காலங்களில் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிக கூட்டங்கள் நடைபெறும், ஆகையால் அரசாங்கம் விழிப்புடன் வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் என தெரிவித்தார். விபத்து எவ்வாறு நடந்தது என நாம் தற்போது அலசி ஆராய்வது சென்சில்லை, தற்போது சென்ஸ் உடன் மக்களுக்கு நல்லது செய்ய நாம் போவோம், அதன் பிறகு விசாரணை நடைபெறும் போது யார் மேல் தவறு என்ன நடந்தது என்று, மருத்துவ வசதி அவர்களுக்கு முறையாக கிடைத்ததா உள்ளிட்ட அம்சங்கள் விசாரணையில் தெரியவரும்.

எது எப்படி இருந்தாலும் உயிரிழப்புகளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது, வருங்காலங்களில் இது போன்ற விபத்து நடக்கக் கூடாது. இதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும், இதுதான் எனது கோரிக்கை. கூட்டம் அதிகமானால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் நடவடிக்கையாக உள்ளது. எதிர்பார்த்ததை விட அதிக அளவு கூட்டம் வந்ததால் உயிர்ப்பலி ஏற்பட்டது என்ற கருத்து ஏற்க முடியாது. 10 லட்சம் அரசு நிதி உதவி வழங்கியது தொடர்பாக கேள்விக்கு நான் கருத்து கூற விரும்பவில்லை என தெரிவித்தார்.

சென்சேஷனல் ஆக இருப்பதை விட சென்சுடன் இருக்க வேண்டும் என்றார். உள்துறை அமைச்சர் அமித்சா உடனடியாக தமிழக அரசை தொடர்பு கொண்டு என்னென்ன உதவிகள் வேண்டுமோ செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.