அணையில் தண்ணீர் வீணாகாமல் இருக்க தெர்மாகோல் போட்டு மூடி வைத்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பேரவை தொடங்கியதுமே முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்களின் மறைவுக்கு பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அப்போது சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, அதிமுக ஆட்சியில் 1,296 கோடியில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரை மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டதாக தெரிவித்தார். அந்த பணி இன்று ஆமை வேகத்தில் நடக்கிறது என்றும், கழிவுநீரும், குடிநீரும் கலந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் இது தொடர்பாக அரசு மேற்கொண்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள் : சாதிவாரி கணக்கெடுப்பு வேறு..! வன்னியர் உள்ஒதுக்கீடு வேறு..! – அன்புமணி ராமதாஸ் பேட்டி
அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “கம்பத்திலிருந்து மதுரைக்கு நீர் கொண்டு செல்லும் பணியை நீங்கள் ஆரம்பித்தாலும், கிணறு தோண்டும் அனுமதியை பெறாமல் இருந்தீர்கள். இன்னும் 15 கி.மீ தான் மீதம் உள்ளது. மதுரைக்கு இன்னும் 15 நாட்களில் 160 எம்.எல். குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்” என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “செல்லூர் ராஜூ கேட்கும் தண்ணீர் நிச்சயம் வழங்கப்படும். அணையில் தண்ணீர் வீணாகாமல் இருக்க தெர்மாகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.