எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம் என தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தென்காசி மாவட்டத்திற்கு ரயில் மூலம் இன்று காலை 7.30 மணிக்கு தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவரை தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, ரயில் நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அப்போது, குற்றாலம் செல்லும் சாலையின் இருமருகிலும் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து, விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஒய்வெடுத்துவிட்டு சுமார் 10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு செங்கோட்டை வழியாக கணக்கப்பிள்ளை வலசை பகுதியில் விழா நடைபெறும் அரங்கிற்கு சுமார் 11.30 மணியளவில் வருகை தந்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை தந்தனர்.
விழா மேடைக்கு, முதலமைச்சர் வந்தவுடன், முதலாவதாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கையும், தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கையும் , வேளாண்மை வளர்ச்சி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கையும் பார்வையிட்ட அவர், விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, விழா நடைபெறும் மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் சுமார் 22 கோடியே 20 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற 57 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்தியல்துறை உள்ளிட்ட 11 துறைகளில் சுமார் 34 கோடியே 14 லட்சம் மதிப்பில் 23 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர், 33 துறைகளின் வாயிலாக 1 லட்சத்து 3 ஆயிரத்து 57 பயனாளிகளுக்கு, சுமார் 182 கோடியை 52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதற்கு முதற்கட்டமாக சுமார் 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னோட்டமாக வழங்கினார். மொத்தமாக, சுமார் 238 கோடியே 68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
தொடர்ந்து, விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தென்காசி வந்தவுடன் இந்த மண்ணை போல என் மனம் குளிர்ச்சடைந்துள்ளது. எப்போதும் சாரல் வீசும் இந்த மண், சென்னை மாநகரத்திலிருந்து வந்த எனக்கு மிகவும் இதமாக உள்ளது. அனைத்து வளங்களையும் பெற்றுள்ள ஒரு மாவட்டம் தென்காசி. விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்த மண் இது.
புலித்தேவருக்கு நெற்கட்டும் செவலில் மணிமண்டபம் அமைத்துக் கொடுத்தது கலைஞர் ஆட்சியில். பராக்கிரபாண்டியரால் கட்டப்பட்டுள்ள பழமையான கோவிலுக்கு தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கோயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது திமுக ஆட்சியில் தான்.
திமுக ஆட்சி தொடங்கி 19 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை தமிழக மக்களுக்கு செய்யப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்து நெஞ்சை நிமிர்த்து பதில் அளிப்பேன். ஏனென்றால் அவ்வளவு சிறப்பான திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, தென்காசி மாவட்டத்தில் மட்டும் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்கள் பற்றி இப்போது கூறுகிறேன்.
11490 மக்கள் குறைதீர் மனுக்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. 27 கோடியே 77 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், 49,900 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். 2990 திருநங்கைகள் பலன் அடைந்துள்ளனர். இப்படி பல்வேறு சாதனைகளை தென்காசி மாவட்டத்தில் மட்டுமே சொல்லிக் கொண்டே போகலாம்.
தென்காசி மாவட்டம் வினைதீர்த்த நாடார் பட்டியை சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கக் கூடிய ஒரு மாணவி ஆரதனா, ஒரு கடிதம் எனக்கு எழுதினார். அதில் தான் படித்து வரும் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கேட்டிருந்தார். அவரது கோரிக்கை இந்த மேடையிலே நிறைவேற்றபட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் எந்த நலத்திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என தமிழக எதிர்க்கட்சித் எடப்பாடி பழனிச்சாமி புலம்பிக் கொண்டிருக்கிறார். எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம், உணர்வுபூர்வமாக இருக்கிறோம். தமிழகத்தை நாட்டின் தலைசிறந்த மாநிலமாக உருவாக்குவதை எங்களது குறிக்கோள். மத்திய அரசு சார்பில் வெளியிடப்படும் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தாலே தமிழகத்தின் வளர்ச்சி தெரியும் என்று கூறினார்.