சிவகங்கை மாவட்ட நகராட்சி அலுவலகத்தில் மாட்டு வண்டியில் கையில் கரும்புகளை ஏந்தி வந்து நூதன முறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் உள்ள உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றுவரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக ஒருவர் கூட மனுத் தாக்கல் செய்யாத நிலையில் இன்று அதிமுக, தே.மு.தி.க, பா.ஜ.க மற்றும் திமுகவில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சுயேச்சையாக வந்து தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
எல்லாக் கட்சிகளும் தங்களின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து கொண்டிருந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய நகராட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தனர். மனுத் தாக்கல் செய்ய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மூவர் மாட்டு வண்டியில் தங்களது கட்சி சின்னமான கரும்புகளை கையில் ஏந்தி நகர் முழுவதும் ஊர்வலமாகச் சென்றனர். பின் நகராட்சி அலுவலகம் வந்த நாம் தமிழிர் கட்சி வேட்பாளர் . தங்களின் வேட்பு மனுக்களைச் சிவகங்கை நகராட்சியின் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.
கடந்த சில நாட்களாக ஆரவாரமின்றி காணப்பட்ட நகராட்சி அலுவலகம் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய அதிகமானோர் வந்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.







