கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபயணமாக சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக ஸ்ரீமதியின் தாயார் தெரிவித்துள்ளார்.
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஸ்ரீமதி உடலை இரண்டு முறை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையை ஜிப்மர் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை நேற்றைய தினம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்நிலையில் ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையின் நகலை வழங்குமாறு ஸ்ரீமதியின் தாயார் செல்வி தரப்பில் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீமதியின் தாயார் செல்வி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீமதியின் தோழிகள் இருவர் ஆஜராகி ரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளனர். அவர்கள் உண்மையிலையே ஸ்ரீமதியின் தோழிகள் தான் என தங்களுக்கு தெரியவேண்டும் என்பதால் அவர்களின் புகைப்படமோ, பெயரையோ தெரிவிக்க வேண்டும் எனவும், அப்படி தெரிவிக்கும் மாணவிகளின் பெயர்கள் ரகசியம் காக்கப்படுமென அவர் தெரிவித்தார். ஜிப்மர் ஆய்வறிக்கை நகலை உடனடியாக தங்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஸ்ரீமதி எழுதிய கடிதம் என பள்ளி நிர்வாகத்தினரால் வழங்கபட்டுள்ளதால் அது ஸ்ரீமதியின் கையெழுத்தில்லை என்றும், தனது மகளின் மரணத்தில் நீதி வேண்டும் என்பதால் தமிழக முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும். எனவே வருகின்ற 26ம் தேதி நெசலூர் கிராமத்திலிருந்து நடைபயணமாக சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நீதி கேட்டு மனு அளிக்க உள்ளதாக ஸ்ரீமதி தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.







