I.N.D.I.A.கூட்டணிக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணாகப்போவது உறுதி என பிரதமர் மோடி பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் 4ம் கட்ட வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : சென்னையில் மிதமான மழை – வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!
இதனைத் தொடர்ந்து, 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20-ம் தேதியும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளிக்கும் வாக்குகள் மத்தியில் வலுவான அரசை அமைக்க உதவும் என பீகார் மாநிலம், ஹாஜிபூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :
“தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளிக்கும் வாக்குகள் மத்தியில் வலுவான அரசை அமைக்க உதவும். ராஷ்ட்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணிக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணாகப்போவது உறுதி. எனவே, நாட்டைக் கட்டியெழுப்ப, குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக பாஜக வின் ஆட்சி அமைய வாக்களியுங்கள்.
நாட்டில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். I.N.D.I.A. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் ராமர் கோயில் குறித்து மோசமாகப் பேசுகின்றனர். ராமர் பக்தர்களை கிண்டல் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை மன்னிப்பீர்களா? தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை முழுவதுமாக இஸ்லாமியர்களுக்கு வழங்க விரும்புகிறார்கள்”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவத்துள்ளார்.








