விருப்ப ஓய்வு திட்டத்தில் பணியைத் துறந்தவருக்கு ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்க மறுத்த கனரா வங்கி உத்தரவு சரியானது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனரா வங்கியில் 1984-ஆம் ஆண்டு எழுத்தராக பணியில் சேர்ந்த எஸ்.குணசேகரன் என்பவர் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் 2008-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி பணியைத் துறந்தார். இந்நிலையில், கடந்த 1995-ஆம் ஆண்டு கனரா வங்கி பென்சன் ஒழுங்குமுறை திட்டத்தின் கீழ், 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி முதல் 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு அமல்படுத்திய பென்ஷன் திட்டத்தில், தன்னையும் சேர்க்க கனரா வங்கிக்கு உத்தரவிடக் கோரி 2014-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அண்மைச் செய்தி: ‘‘எடுத்தேன் கவிழ்த்தேன் என மத்திய அரசு செயல்படுகிறது’ – எம்.பி தொல்.திருமாவளவன்’
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் பணியை விட்டுச் சென்றபோது, சேம நல நிதி திட்டத்தை மனுதாரர் தேர்ந்தெடுத்ததால் பென்சன் திட்டத்தை அவருக்கு அமல்படுத்த முடியாது என கனரா வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களுக்காக மட்டும் கனரா வங்கி பிறப்பித்த திட்டம் ராஜினாமா செய்தவருக்குப் பொருந்தாது எனக் கூறி, கனரா வங்கியின் நிலைப்பாடு சரி எனக் கூறி, குணசேகரனின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.








