சென்னையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் பித்தப்பை, வயிற்று புற்றுநோய் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்கள் பயன்படுத்தப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது. ‘விஷன் ப்ரோ’ என்று அழைக்கப்படும் இந்த வகை ஹெட்செட் முதன்மையாக ஒரு ஆக்மென்ட் ரியாலிட்டி சாதனமாக அறிமுகமாகி உள்ளது. இந்த ஹெட்செட்டில் உள்ள பட்டனை பயன்படுத்தி எளிதாக AR மற்றும் VR முறைகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
மற்ற ஹெட்செட்களைப் போன்று இல்லாமல், இந்த விஷன் ப்ரோவில், பயனர்கள் தங்கள் கண்கள் மற்றும் கைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். பயனர்கள் ஸ்க்ரோல் செய்வது, மற்றும் சிரி செயலியை உபயோகப்படுத்துவது போன்றவற்றை இந்த ஹெட்செட் மூலம் செய்துகொள்ளலாம். ஆப்பிள் கம்ப்யூட்டர், லேப்டாப், டி.வி போன்றவற்றிலும் ப்ளூடூத் மூலம் இந்த ஹெட்செட்டை இணைத்து பயன்படுத்தலாம்.
இந்த ‘விஷன் ப்ரோ’ எடை குறைவு என்பதால் பேட்டரி பேக்கப் 2 மணி நேரம் மட்டுமே இருக்கும். மற்ற வகை விஷன் ப்ரோ ஹெட்செட்டுகள் பயன்படுத்தும்போது, அதை அணிந்திருப்பவர் தனது சுற்றுப்புறத்தைப் பார்க்க முடியாது. ஆனால் இந்த வகை ஹெட்செட்டுகள் உயர் தெளிவுத்திறன் கொண்ட டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. மேலும் நம்மை சுற்றி உள்ளவற்றை முழு வண்ணத்தில் காண்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது சிறந்த வீடியோ மற்றும் ஆடியோக்களை வழங்குகிறது. இந்த ஹெட்செட் மூலம் உங்கள் iOS செயலிகளை பார்க்கவும் பயன்படுத்தவும் முடியும். இந்த நிலையில், சென்னையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் பித்தப்பை, வயிற்று புற்றுநோய் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்கள் பயன்படுத்தப்படுகிறது.
இகுகுறித்து அறுவைசிகிச்சை காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் மற்றும் ஜெம் மருத்துவமனைகளின் சிஓஓ டாக்டர் ஆர். பார்த்தசாரதி கூறுகையில், “இதுபோன்ற உயர் தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், கீ ஹோல் அறுவை சிகிச்சை செய்யும் பணி மிகவும் எளிதாகிவிட்டது. லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையைக் காண்பிக்கும் மானிட்டரில் நான் எதைப் பார்க்கிறேனோ அதை இந்தக் கருவியிலும் பார்க்கலாம்.
கூடுதலாக, நான் CT ஸ்கேன் பார்க்க விரும்பினால், அதையும் ஒரே நேரத்தில் சாதனத்திலேயே பார்க்க முடியும். நோயாளியின் உள் உறுப்புகளை ஒரு சுற்று பெரியதாகவும், அவற்றை மிக விரிவாகவும் இதன் மூலம் பார்க்க முடிகிறது. இந்த சாதனத்தை பயன்படுத்துவதால் நீண்ட நேர அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு எங்களுக்கு கழுத்து வலி ஏற்படுவதில்லை.
வழக்கமாக, நாங்கள் அறுவை சிகிச்சை அரங்கில் 55-இன்ச் 4K தெளிவுத்திறன் கொண்ட அறுவை சிகிச்சை மானிட்டர் வைத்திருக்கிறோம். இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களும், இரண்டு துணைப் பணியாளர்களும் அந்த ஒற்றை மானிட்டரைப் பார்க்க வேண்டும். அதாவது ஒவ்வொருவரும் மானிட்டரை நோக்கி திரும்பி நிகழ் நேர வீடியோவைப் பார்க்க வேண்டும். ஆனால் இந்த ஹெட்செட் மூலம், நான் பல டேப்களைத் திறந்து வைத்து, நோயாளியின் CT ஸ்கேன், MRI ஸ்கேன் மற்றும் பிற தரவுகளை ஒரே நேரத்தில் பார்க்கிறேன்” என்றார்.








