விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் பத்தாயிரத்து எட்டு ருத்ராட்சங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் விநாயகர் சிலை பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே இராதாநல்லூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பத்தாயிரத்து எட்டு ருத்ராட்சங்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பிரத்தியேகமாக அயோத்தியில் இருந்து மொத்தமாக ஐந்து முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு அரசின் விதிமுறைகளை பின்பற்றி 10 அடி உயர விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் புறத்தில் நூலை கொண்டு ருத்ராட்சங்களைக் கோர்த்து விநாயகர் முழுமையாக அலங்கரிக்கப்படுகிறார். இந்து மகா சபா வைச் சேர்ந்த தொண்டர்கள் கடந்த 15 நாட்களாக இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தயார் செய்யப்படும் விநாயகர் சிலை கும்பகோணத்தில் வைக்கப்படும் என்றும் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் ருத்ராட்சங்கள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சௌம்யா.மோ






