அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினருடன் தொழில் முறையில் தொடர்பு வைத்துள்ளவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை. மேற்கொண்டு வருகிறது, சென்னை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது.
இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டப்படி, சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் தான், ஜாமீன் மனு மட்டுமல்லாமல், முழு வழக்கையும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து, வரும் வெள்ளிக்கிழமைக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செப். 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டிலும் அமலாக்க்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.