விஜய் மக்கள் இயக்கத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களை நேரில் சந்தித்த நடிகர் விஜய் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்க உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அடுத்த படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேச முடிவெடுத்து அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.
தற்போது நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, அம்பேத்கர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பிறந்தநாளன்று அவர்களது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, இப்தார் நிகழ்ச்சி நடத்துவது போன்றவற்றை நடத்தினர்.
கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.
அண்மையில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை வரவழைத்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களை இன்று சந்தித்தார். அவருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர். புதிய கெட்டப்பில் வந்து இறங்கிய விஜய்யை பார்த்ததும் அவரது ரசிகர்கள் விசில் சத்தத்தை தெறிக்கவிட்டனர். மேலும் விஜய்யை கான கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில், போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை கொண்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், தேனி, சேலம், கிருஷ்ணகிரி ஒசூர், விருதுநகர், சிவகங்கை, திருச்சி திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 234 தொகுதிகளைச் சேர்ந்த தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அணி தலைவர்கள் என 300 பேர் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் 3 நாட்கள் நடைபெற உள்ளது. செல்போன், பேனா எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னாதாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு அறுசுவை உணவுடன் மதிய விருந்து வழங்கப்பட்டது.
https://twitter.com/news7tamil/status/1678698191909437447?s=20
- பி.ஜேம்ஸ் லிசா









