குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் 24 நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்றும் நாளையும் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தொடர்ந்து 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே டிஐஜி விஜயகுமார் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஐஜி விஜயகுமார், “பொதுமக்களுக்காக, காவல் உதவி மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். 1512 என்ற எண்ணையும், 9962500500 என்ற வாட்ஸ்அப் எண்ணையும் தொடர்பு கொண்டு, மக்கள் உதவி கோரலாம். தகவலும் தெரிவிக்கலாம்.
மோப்பநாய் மற்றும் வெடி பொருட்களை செயலிழக்க செய்யும் பயிற்சி பெற்ற காவலர்களை கொண்டு முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்புத்தூர், சேலம், மதுரை, திருச்சி, மற்றும் திருநெல்வேலி, ஆகிய ரயில் நிலையங்களில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருவகிறது.சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் பிளாட்பாரங்கள் மற்றும் ரயில் நிலையங்களின் நுழைவாயில்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.







