ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து இயங்கி வருவதாகவும், அந்நிறுவனத்தின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்து பரிசீலிக்கப்படும் எனவும் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் தன்னுடைய உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஏற்கனவே ஆலோ சனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில், ஃபோர்டு நிறுவனத்திற்கு நேரடி உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுடன் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அன்பரசன், செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதால் அதனை மூட உள்ளதாக அறிவித்து உள்ளனர். இந்நிலையில் அதற்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினோம். இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அவர்கள் தரப்பில் வைக்கப்பட்டுள்ளன. அரசின் மூலமாக சில சலுகைகள் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.
அதை முதலமைச்சரிடம் தெரிவித்து அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டு மோ அதை எடுப்போம். சென்னை புறநகர் பகுதிகளில் 74 நிறுவனங்கள் ஃபோர்டு நிறுவனத்திற்கு சப்ளை செய்கின்றனர். ஃபோர்டு நிறுவனம் இப்போது மூடப்படவில்லை, இயங்கி கொண்டுதான் இருக்கின்றது. அடுத்த ஆண்டு நிறுவனம் மூடப்படுவதாக அறிவித்துள்ளதால், அதற்கு முன்பாக அங்கு வேலை செய்பவர்கள் யாரும் வேலை இழப்புக்கு ஆளாகாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.