வேலூர் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம் என மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க முக்கிய சுற்றுலா தலமான வேலூர் கோட்டை உள்ளது. இந்த கோட்டையின் மதில் சுவர் மீது ஏறி சுற்றுலா பயணிகள் அகழியை பார்வையிட்டு சுற்றி வருவதை பெரும்பாலும் விரும்புகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு பள்ளிகொண்டா, பாகாயம் என்ற வேலூர் மாவட்டத்தில் சில
பகுதிகளில் இருந்து இஸ்லாமிய பெண்கள் தங்களது நண்பர்களுடன் மதில் சுவரின்
சுற்றுப்பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இஸ்லாமிய பெண்கள்
அமர்ந்திருந்ததைக் கண்ட சில இஸ்லாமிய இளைஞர்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு எப்படி நீங்கள் வேறொரு ஆணுடன் ஊர் சுற்றலாம் என கேள்வி எழுப்பியதோடு
மேலும் ஹிஜாபை அகற்ற வற்புறுத்தினர்.
இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த ஒரு பெண் ஹிஜாபை போட்டுக்கொண்டு இன்னொரு ஆணுடன் சுற்றலாமா என உருது மொழியில் அந்த பெண்ணிடம் அவர்கள் கேட்கின்றனர். வீடியோ எடுக்க வேண்டாம் என பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொண்ட பிறகும் வீடியோ எடுத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ எடுத்த நபர் குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர்
விசாரணை மேற்கொண்டனர். இது போன்ற செயல்கள் வேலூர் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் பெண்கள் குறித்த பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சமுதாயத்தில் அமைதியை சீர் கெடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே வேலூர் கோட்டையில் நடைபெறும் பல்வேறு குற்ற செயல்களை தடுக்க
அதிகப்படியான காவலர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள
நிலையில் இது போன்ற செயல் தொடர்ந்து வருகிறது. ஆகவே வேலூர் கோட்டை பகுதியில் காவலர் பாதுகாப்பை அதிகப்படுத்துவதுடன் ரோந்து சென்று இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் வடக்கு காவல்நிலைய போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட 7பேரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..
வேலூர் கோட்டையில் நிரந்தரமாக காவல்துறை மூலம் ரோந்து மேற்கொள்ளப்படும். கைது செய்யப்பட்டவர்கள் வீடியோ எடுக்கப்பட்டதற்கான நோக்கம் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம். கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை. “ என தெரிவித்தார்.







