விவசாயிகள் மீதான காவல்துறையின் அடக்குமுறைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்தினர் சிங்கு எல்லையில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர். அப்போது போலீசார் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போதும் கலையாமல் தொடர்ந்து முன்னேறிவந்த விவசாயிகள் மீது குதிரைப்படை போலீஸார் தடியடி நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் விவசாயிகள் மீதான காவல்துறையின் அடக்குமுறைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகள் கடந்த 62 நாட்களாக நியாயமான கோரிக்கைகளுக்காக வாட்டி வதைக்கும் உறை பனியில் அறப்போராட்டம் நடத்துவதகாவும், எந்த நாட்டிலும் இந்த போராட்டம் நடந்தது இல்லை என்றும் கூறியுள்ளார். உச்சநீதிமன்றமே விவசாயிகளின் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, மத்திய அரசு தனது பிடிவாதப் போக்கைக் கைவிட வேண்டும் என்று கூறியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், ‘மக்கள் கிளர்ச்சி புரட்சிப் பெருவெள்ளமாக மாறும். காவல்துறை, இராணுவத்தைக் கொண்டு அவர்களை அடக்க முடியாது. 62 நாட்களாக துளியளவும் வன்முறைக்கு இடம் கொடுக்காமல், விவசாயிகள் அமைதி வழிப் போராட்டமே நடத்தினர். குடியரசு தினமான இன்று விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சை மத்திய அரசு நடத்தி இருக்கிறது. இந்த அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன். நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடித்து, அடக்குமுறையின் மூலம் விவசாயிகளை ஒடுக்கிவிடலாம் என்று கருதினால் விபரீத முடிவே ஏற்படும். அதற்கு மத்திய அரசே முழுப் பொறுப்பு ஆகும்’ என வைகோ தெரிவித்துள்ளார்.