காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் இரண்டே மாதங்களில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதார
பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் 96% முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளோம். 92% இரண்டாவது தவனை தடுப்பூசி செலுத்தி உள்ளோம். 96% மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியோடு உள்ளனர். அதனால் கொரோனோ இறப்பு 6 மாதமாக இல்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தில் கடந்த 10 மாதத்தில் வெறும் 2 பேர் தான் டெங்குவால் இறந்துள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. உலகத்திற்கே வழிகாட்டியாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் உள்ளது. மத்திய சுகாதார துறை அமைச்சரே நம்மை இது குறித்து தொடர்ந்து பாராட்டியுள்ளார்.
பல நேரங்களில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தவறு இழைக்கும் போது உங்கள் மீது கடினமாக நடந்து கொள்ளும் சூழல் உருவாகிறது. வேண்டுமென்றே யாரையும் பழிவாங்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. அரசு மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்படும் போது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் சூழல் உங்களுக்கு உருவாகிறது. யாரையும் பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கம் எங்களுக்கு இல்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது மருத்துவர் அங்கு பணியில் இல்லாமல் அவருடைய சொந்த வழக்கு தொடர்பாக கோவைக்கு சென்று இருந்தார். இது போன்ற செயல்களில் நீங்கள் ஈடுபடும் போது தான் கடினமான நடவடிக்கை எடுக்கும் நிலை எங்களுக்கும் உருவாகிறது என கூறினார்.
தொடாந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் புதிய 5 மருந்து கிடங்குகள் கட்ட முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. 4307 காலி பணியிடங்கள் என கண்டறியப்பட்டு செவிலியர்களை நியமனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இதில் தற்போது 1021 பேருக்கு கலந்தாய்வு நடத்தி உள்ளோம். இரண்டே மாதாத்தில் காலியான உள்ள செவிலியர்கள் பணி நிரப்பப்படும்.
தழகத்தில் மருத்துவர்களுக்கு சம்பளம் உயர்த்தி தரவேண்டும் என்கிற கோரிக்கையை
பொறுத்த வரை இரண்டு தரப்பிலான மருத்துவ சங்கங்கள் வெவ்வேறு விதமான கோரிக்கையை முன் வைக்கின்றனர். இது தொடர்பாக 18 முறை இரண்டு சங்கங்களையும் அழைத்து பேசி உள்ளோம்,விரைவில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு அதற்கான முடிவு எட்டப்படும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.