உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இதனிடையே, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆதித்யநாத் நேற்று தலைநகர் லக்னோவில் இருந்து வாரணாசி சென்றுள்ளார். இதையடுத்து நேற்று பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைத்தல், ஆய்வு போன்ற பணிகளில் ஈடுபட்டார். இரவு வாரணாசி அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். இதையடுத்து, இன்று காலை வாரணாசியில் இருந்து லக்னோவுக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டுள்ளார். வாரணாசியில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைன் மைதானத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்த ஹெலிகாப்டர் மீது ஒரு பறவை மோதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, பாதுகாப்பை கருதி ஹெலிகாப்டர் அவசரமாக தரை இறக்கப்பட்டது. முதல்கட்ட தகவல்களின் படி, ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டதும் யோகி ஆதித்யநாத் மீண்டும் வாரணாசி அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றுள்ளார். வாரணாசியில் இருந்து அரசு விமானம் மூலம் அவர் லக்னோ திரும்ப இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தை வாரணாசி மாவட்ட ஆட்சியர் கெளசிக் ராஜ் சர்மாவும் உறுதி செய்துள்ளார். முதல் கட்ட விசாரணையில், ஹெலிகாப்டர் ஜன்னல் மீது பறவை மோதியதாகவும், இதன் காரணமாக பைலட் ஹெலிகாப்படரை தரை இறக்க கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதிய சம்பவம், உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா







