மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படாததே தஞ்சை தேர் விபத்திற்கு காரணம் என்று சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
தஞ்சை தேர் விபத்து குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், தஞ்சை மாவட்டம், களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின் போது, தேர் உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனக்கூறிய அவர், மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே, திட்டமிட்டு உரிய நடவடிக்கை எடுக்காதது தான் விபத்துக்கு காரணம் என சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், மதுரை சித்திரை திருவிழாவில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தான் இருவர் உயிரிழக்க நேரிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதனை தொடர்ந்து திருவிழாக் காலங்களில் அரசு முன்னேற்பாடுகள் செய்யாததைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக அதிமுக சார்பாக வைத்திலிங்கம் தஞ்சை செல்லவிருக்கிறார் என குறிப்பிட்டார்.
இதேபோன்று, மதுரை சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் அதிகாலையில் வைகை ஆற்றில் இறங்குவது வழக்கம். ஆனால் முழுமையான ஒருங்கிணைப்பு இல்லாததால் நள்ளிரவுக்கு பதில் அதிகாலை புறப்பட்டதால், மண்டகப்படிகளுக்கு செல்லாமல் வைகை ஆற்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் தான் 2 பக்தர்கள் பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
மேலும், மதுரை சித்திரைத் திருவிழாவில் அரசு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிவிட்டது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.