சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், வரும் நிதியாண்டில் நரம்பியல் மற்றும் நெஞ்சகத் துறைக்கு புதிய கட்டடம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், 105 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், அந்த கட்டடத்தில் மொத்தம் 99 நோயாளிகள் சிகிச்சையில் இருந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டதும் 4 தீயணைப்பு வாகனங்கள் போராடி 3 மணி நேரத்தில் தீயை அணைத்ததாகவும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விபத்து ஏற்பட்டதும் நேரில் சென்று வரும்படி முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும், நோயாளிகள் அனைவரும் வேறு கட்டடத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தீ விபத்தால் உயிர் பாதிப்பு ஏதுமில்லை என்பது மன நிறைவாக இருப்பதாக கூறிய அவர், விபத்து தொடர்பாக பலமுறை முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்ததாகவும் விளக்கமளித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்புப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரித்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மருத்துவமனை நிர்வாகம் முன்வைத்ததாகவும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும் நிதியாண்டில் நரம்பியல் மற்றும் நெஞ்சகத் துறைக்கு புதிய கட்டடம் உருவாக்கித் தரப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுத்தியளித்துள்ளார்.