கேரளாவில் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலக்கழகத்தில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாகுளத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ‘டெக் ஃபெஸ்ட் விழா நடைபெற்றது. இந்த விழாவை கொச்சி ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாவில் சுமார் 2000 மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திறந்தவெளி அரங்கில் மழை பெய்ததால், வெளியே இருந்தவர்கள் அவசர அவசரமாக உள்ளே செல்ல முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. உள்அரங்கத்துக்குச் செல்ல முயன்றவர்கள் பலர் படிக்கட்டில் தவறி கீழே விழுந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 46 பேர் களமச்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழாவில் நிகிதா காந்தி தலைமையில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்துள்ள நால்வரில் இரண்டு பேர் பெண்கள்; இரண்டு பேர் சிறுவர்கள். ஆனால், இன்னும் அவர்கள் யார் என்று அடையாளம் தெரியவரவில்லை.
ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார், மற்ற மூவரும் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட உடனேயே உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் களமசேரி மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 2 மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் ரத்து செய்தனர். களமசேரி மருத்துவக் கல்லூரி மற்றும் எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் கூடுதல் ஏற்பாடுகளை செய்ய சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்வித்துறை இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.