“ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்து எப்போது சந்தைக்கு வரும்?”

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்து சந்தைக்கு எப்போது வரும் என்பதை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவை குணப்படுத்தும் 2டிஜி எனும்…

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்து சந்தைக்கு எப்போது வரும் என்பதை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவை குணப்படுத்தும் 2டிஜி எனும் மருந்தை, டி.ஆர்.டி.ஓ. ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாகவும், அதை சந்தைக்கு கொண்டு வரக்கோரி சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், 2டிஜி மருந்தை உற்பத்தி செய்ய முன்வந்த 40 இந்திய மருந்து நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ஆந்திரா மாநிலம், கிருஷ்ணாம்பட்டினத்தைச் சேர்ந்த ஆனந்தய்யா என்பவர் கண்டுபிடித்த பாரம்பரியமான மருந்து, கொரோனாவை 30 நிமிடங்களில் குணப்படுத்துவதாக வெளிவந்த செய்தியை சுட்டிக்காட்டிய அவர்கள், அவரின் மருந்தை ஏன் சர்வதே அளவில் சந்தைப்படுத்தக் கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கி வரும் ஆனந்தய்யா வாழும் கடவுள் என்றும் அவருக்கு நீதிமன்றம் தலைவணங்குவதாகவும் புகழாரம் சூட்டினர். இதற்கு ஆனந்தய்யாவின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தரப்பு விளக்கமளித்தது.

இதையடுத்து 2டிஜி மருந்து உற்பத்தி எப்போது பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்ற விவரங்களையும் சேர்த்து, ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்படுவது குறித்தும் மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.