நிவேதா பெத்துராஜின் கரப்பான் பூச்சி புகார்: ஓட்டல் மீது அதிகாரிகள் நடவடிக்கை

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் செய்ததை அடுத்து, சம்மந்தப்பட்ட ஓட்டல் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ’ஒருநாள் கூத்து’ படம் மூலம் சினிமாவில்…

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் செய்ததை அடுத்து, சம்மந்தப்பட்ட ஓட்டல் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

’ஒருநாள் கூத்து’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து, டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியின், திமிரு பிடிச்சவன், விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிரபுதேவாவுடன் அவர் நடித்துள்ள ’பொன் மாணிக்கவேல்’ இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

அல்லு அர்ஜுனுடன் அவர் நடித்த ’அலா வைகுந்தபுரம்லோ’ ஹிட்டானதை அடுத்து, அங்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இப்போது அங்கு மூன்று படங்களில் நடித்து வருகிறார். இவர், தனது சமூக வலைதளப்பக்கத்தில் சில நாட்களுக்கு முன் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார்.

ஸ்விக்கி மற்றும் உணவகங்கள் என்ன மாதிரியான தரத்தை பினபற்றுகின்றன என்பது தெரியவில்லை. நான் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் இரண்டு முறை, கரப்பான் பூச்சி இருந்தது. இதுபோன்ற உணவகங்களை சோதனை செய்து தரமாக இல்லை என்றால் அபராதம் விதிக்க வேண்டும். ரசிகர்கள் இது தொடர்பாக புகாரளிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். ஆதாரமாக, உணவில் கரப்பான் பூச்சி கிடக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் நிவேதாவின் புகார் அடிப்படையில், உணவு சப்ளை செய்த பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஓட்டலுக்கு சென்று சோதனையிட்டனர். அங்கு கிச்சன் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஓட்டலுக்கு தற்காலிகத் தடை விதித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

3 நாட்களுக்குள் குறைகளை நிவர்த்தி செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் அந்த ஓட்டலுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. அங்கிருந்த 10 கிலோ பழைய இறைச்சியையும் அவர்கள் பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.