தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில், வன்முறை மற்றும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3,000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை கடந்த மே மாதம் 18-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிக்க பயன்படுத்தும் Public Addressing System(அ) நன்றாக கேட்கக்கூடிய மெகா போன் மூலமாக எச்சரிக்கை செய்யப்படவில்லை என்றும், துப்பாக்கி சூடு நடத்திய போது கூட காவல் உயர் அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை எனவும், துப்பாக்கிச்சூடு நடத்திய கன் மேன்கள் எனப்படும் ஷூட்டர்களுக்கு கொடுத்த கட்டளை மற்ற அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்திருப்பதாகவும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் பின்னந்தலை வழியாக குண்டு துளைத்து முன் வழியாக உள்ளுறுப்புகளை சிதைத்து குண்டு வெளியே வந்திருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலருக்கு முதுகின் பின் பகுதியிலும், குண்டு துளைத்து இதயம் போன்ற முக்கிய பகுதியை சிதைத்து, மார்பின் முன்பகுதி வழியாக வெளியேறியதும், ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருக்கிறது என்பதை காட்டுவதாகவும், மேலும் இடுப்புக்கு கீழே யாரையும் சுடவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவலர் சுடலைக்கண்ணு தனி நபராக அபாயகரமான துப்பாக்கியை கொண்டு மொத்தம் 17 ரவுண்டு சுட்டுள்ளதாக அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கடமையிலிருந்து தவறியதும், அவரது அலட்சியமான நடவடிக்கையே போராட்டம், துப்பாக்கிச்சூட்டில் முடிய அடித்தளமாக இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரையும் செய்துள்ளது.