பிசிசிஐ அமைப்பின் தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2019ல் அக்டோபரில் பிசிசிஐ தலைவராக முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலியும், செயலாளராக ஜெய்ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் பிசிசஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன்படி கங்குலி, ஜெய்ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் 3 வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது. எனினும் பிசிசிஐயின் தலைமை பொறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 1983ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியை சேர்ந்த ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டத்தில் பிசிசிஐ தலைவராக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ரோஜர் பின்னி, 2019 முதல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும், தேர்வுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1983ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் பின்னியும் இடம்பெற்றிருந்தார். அந்த போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகள், 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.







