ஆட்சி மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதன் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்வது மிகவும் வருத்தத்திற்குரியது என திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆங்கிலேயர்களின் அதிகார மாற்றத்திற்காக செங்கோல் வழங்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், தமிழ்நாட்டில் அரசியல் நோக்கத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவினரும் சம்பிரதாயமாக செங்கோலை பயன்படுத்துகின்றனர் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1947-ல், ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் செங்கோல் வழங்கப் பெற்றது குறித்த வரலாற்றைப் பொய் என்று இந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி கூறியதாகத் தெரியவருகிறது.
ஆட்சி மாற்றத்தின் போது, அதனை அடையாளப்படுத்துகிற சடங்கினைச் செய்விக்க அழைக்கப் பெற்றோம் என்பது நம்முடைய ஆதீனத்தின் பதிவுகள் உட்பட, பலவகையான ஆதாரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜாஜியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நம்முடைய ஆதீனகர்த்தர் தக்க செங்கோல் செய்வித்து, முறையான சடங்குகளில், மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் அதைக் கொடுத்து வாங்கி, தொடர்ந்து செங்கோலை ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கச் செய்தார்கள். நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் சின்னம் என்பதையும் தெளிவாகத் தெரிவித்தார்கள்.
அரசியலுக்காக, அரசியல் ஆதாயங்களுக்காக இந்தச் சடங்குகளும் நிகழ்வுகளும் பொய் அல்லது போலி என்று கூறுதல், எமது நம்பிக்கைத் தன்மையின்மீது ஐயம் எழுப்புதல், ஆட்சி மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதன் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்தல் ஆகியவை மிகுந்த வருத்தத்திற்குரியவை, தவிர்க்கப்படவேண்டியவை. இது குறித்த விரிவான தகவல்களை இன்று மாலை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முழுவதும் தெரிவிக்கின்றோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.