நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக அதிபர் டர்ம்ப் மீது பதவி நீக்க தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க வரலாற்றில் 2 முறை பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட முதல் அதிபராக என்ற பெயரை ட்ரம்ப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்பை விட 70 தேர்தல் வாக்காளர்களை அதிகம் பெற்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனிடையே தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்துவரும் அதிபர் ட்ரம்ப் வாக்குப்பதிவில் மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிவித்து வருகிறார். இதனிடையே தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கையின்போது அமெரிக்காவின் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழந்த அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே நாடாளுமன்ற வன்முறைக்கு அதிபர் ட்ரம்பின் சர்ச்சை பேச்சுக்களே காரணம் எனக்கூறி ட்ரம்ப் பேசிய வீடியோக்களை ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் நீக்கின. மேலும் வன்முறைக்கு வழிவகுக்கும் என்பதால் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. வன்முறைக்கு ட்ரம்பே காரணம் என குற்றம் சாட்டி வரும் எதிர்கட்சி அதிபரை பதவி விலக கோரிக்கை விடுத்தது. அதிபரை பதவி நீக்கம் செய்யும் நடைமுறைக்கு துணை அதிபர் மைக் பென்ஸ் ஒப்புதல் அளிக்காததை தொடர்ந்து பிரதிநிதிகள் சபையில் இன்று அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்தை நிறைவேற்றியது. இதற்கு ஆதரவாக 232 வாக்குகளும் எதிராக 197 வாக்குகளும் கிடைத்தன. இந்த தீர்மானத்தை தொடர்ந்து அமெரிக்க வரலாற்றிலேயே ஆட்சியில் இருக்கும்போது இரண்டு பதவிநீக்க தீர்மானங்களை சந்தித்த முதல் அதிபர் என்ற பெயரை அதிபர் ட்ரம்ப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது போட்டியாளரான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பிடனுக்கு எதிராக தவறான தகவல்களை தெரிவிக்குமாறு டிரம்ப், உக்ரைன் அதிபரின் உதவியை கோரிய விவகாரத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் மீது பதவிநீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.







