தாய் தந்தையின் ஆதரவு இல்லாமல் அரவணைப்புக்காக ஏங்கும் 6 வயது சிறுவனை தொண்டு நிறுவனங்கள் மீட்டு உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் வசிக்கும் ராஜா குட்டி என்பவர் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 6 வயதில் நரசிம்மன் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ராஜா குட்டியின் தாய் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். இத்தனை நாட்களாக தாயின் அரவணைப்பில் வளர்ந்த மகன், தற்போது அன்பு காட்ட ஆள் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.
நரசிம்மனின் தந்தையும் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவதால், மகனை சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார். அதிலும் சமீபத்தில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு குழந்தையை கவனித்துக் கொள்ள ஆள் இல்லை. காலையில் வேலை, மாலையில் மது என தந்தை சுற்றியதால் நரசிம்மனுக்கு உணவு கொடுக்க கூட ஆள் இல்லாமல் போயுள்ளது.
நரசிம்மன் உணவின்றி, பசியால் தினமும் அழுவததை கண்டு வருத்தமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் நாட்டறம்பள்ளி சிறப்பு காவல் ஆய்வாளர் ராஜா, குழந்தையை மீட்டு உணவளித்து வருகிறார். அரவணைப்பு இல்லாமல் தவிக்கும் குழந்தையை தொண்டு நிறுவனங்கள் மீட்டு உதவி செய்ய வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருக்கிறது.







