பழனிமலையை கண்காணிக்கும் சிவமலை, மகாபாரதத்திற்கு தொடர்பு இருக்கும் தவ மலை, ஆங்கிலேயர்கள் எல்லைகளை வரையறுக்க பயன்படுத்திய எல்லையில்லா உயரம் கொண்ட உச்சி மலை, மேகங்கள் தொட்டு செல்லும் உயர மலை, லிங்கமே வடிவில் காட்சியளிக்கும் சிவ மலை, இத்தகைய அரும் பெருமைகளை கொண்ட இந்த மலை தான் கொண்டராங்கி மலை.
இந்த மலையை பார்த்தவுடன் அதன் உச்சி சென்று அங்கிருந்து இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எல்லாருக்கும் எழத் தான் செய்யும்! ஆனால் இந்த மலையின் உச்சியை அடைய மேற்கொள்ள வேண்டிய பயணம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. 3825 அடி உயரம் கொண்ட இந்த மலையை ஏறும் முயற்சியில் நியூஸ்7 தமிழ் பக்தி களமிறங்கியது.
பொதிகை மலையின் உச்சிக்கு சென்று, தமிழ் வளர்த்த அகத்திய மாமுனியின் தடங்களை பதிவு செய்த நியூஸ்7 தமிழ் பக்தி யூடியூப் சேனல், பூமியில் இருந்து வானம் தொட்டு நிற்கும் கொண்டராங்கி மலை பயணத்தை மேற்கொண்டது. கடினமான மலையேறிய ஆன்மிக பயண அனுபவத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசத்தூர் கீரனூர் பகுதியில் உள்ள சிவ லிங்க வடிவிலான மலைக்கு தினந்தோறும் மேகக்கூட்டங்கள் வந்து அபிஷேகம் செய்து கொண்டே இருக்கும் அந்த மலை தான் கொண்டராங்கி மலை. கடல் மட்டத்தில் இருந்து 3825 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியை பார்த்தால் வானத்தை தொட்டு கொண்டு இருப்பது போல் இருக்கும்!
கொண்டராங்கி மலை என பெயர் வரக் காரணம் என்ன வென்று பார்த்தால் கொண்டல் என்றால் மேகம் என்றும் அவை இறங்கி வந்து இந்த மலையை தொட்டு செல்வதால் கொண்டராங்கி மலை என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. கூம்பு வடிவில் பூமியில் இருந்து 3825 அடி உயரத்தில் அமைந்த மலை உச்சியில் தியானம் மேற்கொண்டால், வானில் இருந்து பல நேர்மறையான கதிர்கள் நம்மில் பல்வேறு அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் நிகழ்த்தி காட்டுவதாக நம்பப்படுகிறது.
கீரனூர் கொண்டராங்கி மலை பயணத்தை தொடங்கும் முன் மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் கெட்டிமல்லிஸ்வரர் எனும் சிவன் கோயிலில் வழிபட்டோம். அந்த ஆலயத்தில் வெளிப்பகுதியில் கோயிலின் விவரங்கள் அடங்கிய பதாகை வைக்கப்பட்டிருந்தது. பின் அங்கிருந்த தோரண வாயில் வழியாக படிக்கட்டுகளில் ஏற தொடங்கினோம், மலைப் பாறைகள் செதுக்கப்பட்டு படிகளாக அமைக்கப்பட்டிருந்தது. சுற்றி இருக்கும் எந்த மலை இந்த கொண்டலிறங்கி மலை போல் என்பது தான் தனிச்சிறப்பு.
சிறிது நேரத்தில் மலைப்பாறையானது செங்குத்தாக செல்ல ஆரம்பித்தது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. 20 நிமிட பயணத்தில் மிகுவும் களைப்படைய நேர்ந்தது. அப்போது அங்கிருந்து பார்த்தால் எம் பெருமான் முருகன் வீற்றிருக்கும் பழனி மலை தெரிய தொடங்கியது. கொண்டராங்கி மலைக்கும் நேராக பழனி மலை அமைந்திருப்பது தனிச்சிறப்பு என்றே கூறலாம். தந்தை சிவபெருமான் தன் மகன் பழனி மலை முருகனை தன் பார்வையிலே வைத்திருப்பதாக உணர்வு ஏற்படுகிறது.
அதன் பின்னர் தொடர்ந்த மலை பயணமானது மூச்சு திணறும் அளவிற்கு மிகவும் சிரமத்துடன் மலையேற வேண்டி இருந்தது. அந்தளவு செங்குத்தான இருந்தது. மலை உச்சியில் இருக்கும் மல்லிகார்ஜுன சுவாமியுடன், சுவம்புவாக இருக்கும் சிவனும் என்னை வந்து அவ்வளவு எளிதில் பார்த்து விட முடியுமா என கேள்வி எழுப்பும் அளவிற்கு கடினமாக செங்குத்தான பாதையாக இருந்தது. அப்பன் சிவனை தழுவி கொண்டது போல் லிங்க வடிவிலான கொண்டராங்கி மலையை தழுவி, தழுவி ஏறி செல்ல வேண்டி இருந்தது.
2 மணி நேர மலையேற்றத்திற்கு பின், பாறையில் இருந்த சுனை தெரிந்தது. இந்த சுனையில் இருக்கும் நீர் எப்போதும் வற்றாத நிலையில் இருப்பது அதிசயமாக இருந்தது. இந்த வற்றாத நீருற்றில் இருந்து வரும் தீர்த்தத்தை எடுத்து தான் மலை உச்சிப்பகுதியில் இருக்கும் சுயம்பு வடிவ சிவப்பெருமான் மல்லிகார்ஜுன சாமிக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது.
இதன் பின் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க மலையேறிய சிறிது நேரத்தில் சுயம்பு சிவப்பெருமான் காட்சியளித்தார். அவரை தரிசித்து விட்டு அதன் மேல் பகுதிக்கு சென்றால், அர்ஜூனன் தவம் செய்த இடம் ஈட்டி மற்றும் சூலாயுதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பெளர்ணமி நாளில் இந்த இடத்தில் அமர்ந்து தியானம் மேற்கொண்டால் நம் முன்னோர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பது பக்தர்கள் நம்புவதாக கூறப்படுகிறது. நாமும் அங்கு சிறிது நேரம் பூஜைகள் செய்து வணங்கி விட்டு, அங்கிருந்து கீழே பார்த்தால் மலைகள் சூழ அத்தனை ரம்மியமான காட்சி தெரிந்தது. கடினமான செயல்களுக்கு பின் இறைவனை அடையும் போது தான், நமக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதை கொண்டராங்கி மலை பயணம் உணர்த்தியது.







