திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினரை சிறைபிடித்து, சக பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாரூர் நகர் பகுதியை சேர்ந்த பிரேம் நசீர் என்பவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை காண உறவினர்கள் ஹக்கு, சம்சுதீன் உள்ளிட்ட பலா் சென்றுள்ளனர். அப்போது பிரேம் நசீருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் பிரகதீஸிடம் அவரது உறவினர்கள் கேட்டுள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு மருத்துவர் பிரகதீஸ் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பணியில் இருந்த சக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பணியை புறக்கணித்து சம்பவத்தில் தொடர்புடைய ஹக்கு மற்றும் சம்சுதீன் இருவரையும் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் சென்று அவர்களை மீட்டு அனுப்பி வைத்தனர். இதனால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
—-ரூபி







